கோவில்களில் விஐபி.,கள் எனும் பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களை கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
கோவில்களில் விஐபி.,கள் எனும் பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களை கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருசுந்தரராக பணியாற்றும் சீதாராமன், தன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவிலின் கூட்டத்தை முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 60 காவலர்கள் இருந்த இடத்தில் தற்போது 30 காவலர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி எஸ்.பி., தரப்பில், திருவிழா காலங்களில் கூடுதலாக காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். கோயில் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் நீதிபதி வழங்கிய உத்தரவில், தற்போது செய்துள்ள ஏற்பாடுகள் கோவில் நடைமுறைகளை அமைதியான முறையில் கொண்டுசெல்ல போதுமானதாக உள்ளதா? விஐபி தரிசனம் மூலம் தேவை இல்லாத பல பிரச்னைகள் எழுகின்றன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
விஐபி.,களுக்கு வழங்கப்படும் சலுகைகள், அவர்களது பொறுப்புக்கானதே தவிர, தனிநபருக்கானது அல்ல. பொறுப்புக்கான மரியாதை வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மத நம்பிக்கை உள்ளவர்களே கோவிலுக்கு வருகின்றனர். கோவிலை பொறுத்தவரை கடவுள் மட்டுமே விஐபி. விஐபி.,கள் எனும் பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களை கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார். கோவிலின் கட்டளைதாரர்கள் 10 நிமிடம் மட்டுமே சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.
மேலும் திருசெந்தூர் கோவிலின் சிறப்பு அனுமதி சீட்டை முறைகேடாக பயன்படுத்தும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். திருசெந்தூர் கோயிலில் 40 ஆயுதப்படை காவலர்களை தூத்துக்குடி எஸ்.பி நியமிக்க வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களை பணியாளர்கள், போலீசார் உள்ளிட்டோர் உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கினை ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
