தமிழகத்தில் பெரும்பான்மையினர் கல்வி நிறுவனங்கள் தொடங்க போதுமான உதவிகளும் ஒத்துழைப்பும் கிடைப்பதில்லை. ஆனால், சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் தொடங்க நிறைய உதவிகளும் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
ஆதீனம் கோயில் நிலங்களுக்கு முறையாக குத்தகை அளிக்காத அரசியல்வாதிகள் அடுத்த பிறவியில் வௌவாலாகப் பிறப்பார்கள் என்று மதுரை ஆதீனம் சாபம் விட்டிருக்கிறார்.
தஞ்சாவூரில் மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திருக்கோயில்களின் கும்பாபிஷேகங்கள் தாமதமாகின்றன. இதற்குக் காரணம், அரசியல்வாதிகள்தான். ஆதீன நிலங்கள் பலவும் ஆளுங்கட்சி, எதிர்கட்சிக்காரர்களிடம் உள்ளது. அதற்கு குத்தகையை முறையாகவும் அவர்கள் செலுத்தவில்லை. அதோடு பல இடங்களில் ஆதீன நிலங்களை விற்பனை செய்தும் மோசடி செய்துள்ளார்கள். குத்தகை தொகையைக் கட்டாதவர்கள் அடுத்த பிறவியில் வௌவாலாகப் பிறப்பார்கள். இதற்கெல்லாம் சரியான சட்டத்திட்டங்கள் இல்லை. அதுதான் இதற்கெல்லாம் காரணம்.

பெரும்பான்மையினருக்கு உதவி இல்லை
இன்றைய இளைய சமுதாயம் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்ற ரீதியில் இருக்கிறார்கள். அரசியலும் சினிமாவும் அவர்களை பெரிய அளவில் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாஸ் மார்க் வாங்குகிறார்களோ இல்லையோ, ஆனால் டாஸ்மாக் செல்கிறார்கள். இதைத் தடுக்க வேண்டுமென்றால், அரசு மதுபான கடைகளை மூட வேண்டும். கல்வி கற்பதற்காக வெளி நாடுகள் செல்வதையும் இன்றைய இளைய தலைமுறையினர் தவிர்க்க வேண்டும். நம் நாட்டிலேயே கல்வியைக் கற்க வேண்டும். சுயதொழில்கள் பலவற்றை செய்ய முன்வரவேண்டும். தமிழகத்தில் பெரும்பான்மையினர் கல்வி நிறுவனங்கள் தொடங்க போதுமான உதவிகளும் ஒத்துழைப்பும் கிடைப்பதில்லை. ஆனால், சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் தொடங்க நிறைய உதவிகளும் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
தமிழகம் ஆழ்வார்கள், நாயன்மார்கள் தோன்றிய புண்ணிய பூமி. தமிழர்களுக்கு கெடுதலும் துரோகமும் செய்பவர்கள் அதற்காண பல பலன்களை கண்டிப்பாக அடைந்தே தீருவார்கள். ஒரு காலத்தில் இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுடன் கைகோர்த்திருந்தவர்கள்தான் முந்தைய மத்திய அரசும் ராஜீவ்காந்தி குடும்பமும். ஆனால், இன்று உக்ரைனில் இருந்து தமிழர்களை மீட்பதில் தமிழக அரசும், மத்திய அரசும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஆதீன கோயில்களில் முறையாக பூஜைகள் நடக்கவும், கோயிலுக்குரிய நிலங்கள், சொத்துக்கள் முறையாகப் பராமரிக்க தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
சுத்தமா இருங்க

கோயில் கும்பாபிஷேகங்களை தமிழில் செய்வதில் தவறில்லை. இன்றைய அர்ச்சகர்கள் பலர் வெற்றிலை பாக்கு தரித்துக் கொண்டும், சகல விதமான கெட்டப்பழக்கங்களுடன் உள்ளனர். சுவாமியை தொட்டு பூஜிக்கும் அவர்கள் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதும் வரவேற்புக்குரியதே. ஓதுவார்கள் இல்லாத கோயிலில்களில் ஓதுவார்களை நியமிக்கும் பணியிலும் தற்போது ஈடுபட்டு வருகிறோம்” என்று மதுரை ஆதீனம் தெரிவித்தார்.
