லாரி மோதி அப்பளம்போல நொருங்கிய கார்; குடும்பத்தோடுச் சென்ற தலைமை ஆசிரியர் பலி; நால்வர் பலத்த காயம்...
தருமபுரியில் கிரக பிரவேச நிகழ்ச்சிக்கு காரில் குடும்பத்தோடு சென்றுக் கொண்டிருந்த தலைமை ஆசிரியர் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரியில் கிரக பிரவேச நிகழ்ச்சிக்கு காரில் குடும்பத்தோடு சென்றுக் கொண்டிருந்த தலைமை ஆசிரியர் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார். உடன் சென்ற நான்கு பேர் பலத்த காயம் அடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம், அரூர் அருகேவுள்ளது நரிப்பள்ளி. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் கமலநாதன் (55). இவர் இங்குள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி தமிழமுதம். இவர் தெத்தேரி அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார்.
கமலநாதனின் அண்ணன் திருப்பூரில் புதிதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். அதற்காக கிரக பிரவேச நிகழ்ச்சியில் பங்கேற்க கமலநாதன், தமிழமுதம் மற்றும் இரண்டு மகன்கள் உள்பட ஐந்து பேர் காரில் சென்றனர்.
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் மீது எதிரே வந்த லாரி வேகமாக மோதியது. இதில் கார் அப்பளம்போல நொருங்கியது. காரில் சென்ற அனைவரும் பலத்த காயம் அடைந்தனர்.
இந்த விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், காயம் அடைந்தவர்களை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லும் வழியிலேயே கமலநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற நால்வருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விபத்து குறித்து பாப்பிரெட்டிப்பட்டி காவலாளர்கள் வழக்குப்பதிந்தனர்.
லாரி ஓட்டுநர் குடிபோதையில் இருந்தாரா? விபத்துக்கு லாரி ஓட்டுநரின் அதிவேகம் தான் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.