தனியார் பள்ளிகளுக்கு செம டஃப் கொடுக்கும் அரசுப் பள்ளிகள் !! இன்று முதல் தொடங்கப்பட்டது எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் !!
தனியார் பள்ளிகள் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை நடத்தி பெற்றோர்களை ஈர்த்து வரும் நிலையில் இந்த ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளிலும் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கோடை விடுமுறை தொடங்கியது. நேற்றுடன் விடுமுறை முடிவடைந்து இன்று பள்ளிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று மாணவர்கள் உற்சாகத்துடன் வகுப்புகளுக்கு சென்றனர்.
இந்த புதிய கல்வியாண்டுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள் போன்றவற்றை இன்றே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வழங்கப்படும் என்று கல்வித் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளி வளாகங்களில் இயங்கிவரும் 2,381 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் தொடங்க கடந்த கல்வியாண்டில் தமிக அரசு முடிவு செய்தது.
அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி அங்கன்வாடி மையங்களில் இன்று முதல் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்டன. தருமபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டி அரசுப் பள்ளியில், குத்து விளக்கேற்றி மழலையர் வகுப்புகளைத் தொடங்கிவைத்தார் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்க வைத்தார்.
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு சுமார் 52,000 குழந்தைகள் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் சேர்க்க தமிழக அரசு டார்கெட் வைத்துள்ளது..
இதனிடையே இன்று காலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் புதிய பாடத்திட்ட புத்தகங்களை தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டார்.