கேபிஎன் பஸ் எரிந்தது !! பயணிகள் அலறி அடித்து ஓட்டம் !!
தர்மபுரி அருகே கேபிஎன் சொகுசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பயணிகள் அலறி அடித்து ஓடினர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் எந்தவித காயமுன்றி உயிர் தப்பினர்.
மதுரையில் இருந்தது கேபிஎன் சொகுசுப் பேருந்து ஒன்று 40 பயணிகளுடன் பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கூடுதலாக ஒரு ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது தர்மபுரியை அடுத்த தொப்பூர் ஆஞ்சநேயர் கோயில் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென என்ஜினில் தீப்பிடித்தது. இதையடுத்து பேருந்து ஓட்டுநர் பஸ்சை நிறுத்தி பயணிகளை அவசர அவசரமாக கீழே இறக்கிவிட்டார்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் உடனடியாக அங்கு சென்று பயணிகள் இறங்க உதவி செய்தனர். தீ நன்றாக பிடித்து கொளுந்துவிட்டு எரிவதற்குள் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர்.
இதையடுத்து என்ஜினில் பற்றிய தீ பஸ் முழுவதும் பரவியது. மேலும் பேருந்து முழுவதும் எரிந்து சாம்பலானது.. டிரைவரின் சாதுர்யதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில நடு ரோடில் பேருந்து எரிந்து விபத்துக்குள்ளானதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.