Asianet News TamilAsianet News Tamil

இன்னும் 2 நாட்களில் அனைவரும் பார்க்கும் வகையில் ஜெயலலிதா இருப்பார் – நடிகர் பிரபு பேட்டி

jayalalitha coming-soon-F2RNP2
Author
First Published Nov 8, 2016, 11:29 PM IST


இன்னும் 2 நாட்களில் அனைவரும் பார்க்கும் வகையில் ஜெயலலிதா இருப்பார் என நடிகர் பிரபு, நேற்று அப்பல்லோ மருத்துவமனையில் கூறினார்.

முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்கள் இடைவிடாமல் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையொட்டி அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் முதலமைச்சர் ஜெயலலிதா, பூரண குணமடைய வேண்டி, அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என தினமும் லட்சக்கணக்கானோர் தமிழகம் முழுவதும் உள்ள பல கோயில்களில் யாகம், பூஜை, தேர் இழுத்தல், அலகு குத்துதல் உள்பட பல்வேறு பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.

மேலும் முதலமைச்சர், பல்வேறு கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், சினிமா நட்சத்திரங்களும், அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று, அவரது உடல்குறித்து விசாரித்து செல்கின்றனர்.

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா இன்னும் ஓரிரு நாட்களில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட உள்ளார். அவருக்கு தற்போது போயஸ் கார்டன் வீட்டில் இருந்து உணவு கொண்டு வரப்பட்டு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிவதற்காக, நடிகர் பிரபு, அவரது மனைவி புனிதவதி, மகன் விக்ரம் பிரபு, அவரது மனைவி உஜ்ஜைனி, நடிகர் கிட்டு ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றனர்.

அங்கிருந்த அமைச்சர்கள் மற்றும் டாக்டர்களிடம் ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரித்துவிட்டு வெளியே வந்தனர். அப்போது நடிகர் பிரபு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

முதலமைச்சர் ஜெயலலிதா மிகவும் நலமாக இருக்கிறார். இன்னும் ஓரிரு நாட்களில் சிறப்பு வார்டில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்படுவார். ஜெயலலிதா குணமடைய வேண்டும் என தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் பிரார்த்தனை செய்கின்றனர். அதன் காரணமாக, பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார், கோட்டைக்கும் செல்வார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

எங்கள் குடும்பத்தினர், இவ்வளவு நாட்கள் மருத்துவமனைக்கு வந்து உடல்நலம் விசாரிக்கவில்லை என்றாலும், அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து விசாரித்து கொண்டுதான் இருந்தோம். ஜெயலலிதா மிகவும் நன்றாக குணமாகிவிட்டார். ஆகையால், மக்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கலாம்.

ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். ஜெயலலிதா மீது என்னுடைய தந்தை (சிவாஜி கணேசன்) ரொம்ப பிரியமாக இருப்பார். எங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று ஆண்டவனையும், அப்பாவையும் வேண்டுகிறோம்.

நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையை சந்தித்து பேசினேன். இன்னும் 2 நாட்களில் அனைவரும் பார்க்கும் வகையில் ஜெயலலிதா இருப்பார். கலை உலகம் நன்றாக இருக்கவும், தமிழக மக்கள் நலமாக இருக்கவும் ஜெயலலிதா சீக்கிரம் வர வேண்டும். அவருடைய உடல்நிலை குறித்து டாக்டர்கள், கட்சியினர் தெரிவிக்கும் கருத்துகள் மிகவும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. அந்த அளவுக்கு ஜெயலலிதா நன்றாக இருக்கிறார். மிகவும் நன்றாக குணமடைந்து விரைவில் வருவார்.

இவ்வாறு அவர் பிரபு கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios