ஆணவக் கொலை வழக்கில் கணவனுக்கு தூக்கு தண்டனை ரத்து; மனைவி விடுதலை - மதுரை நீதிமன்றம் உத்தரவு...
மதுரை
ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கணவன் - மனைவிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், வண்ணார்பேட்டை இளங்கோநகரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (27). ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர் இவர் இரயில்வேயில் பணியாற்றினார். இவரும் தச்சநல்லூர் சங்கரநாராயணன் மகள் காவேரியும் காதலித்தனர். இதற்கு காவேரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனெனில் அவர்கள் வேறு சமூகத்தினர்.
அந்த எதிர்ப்பை மீறி அவர்கள் இருவரும் 3.5.2016 அன்று வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர்.
இதனை அறிந்து வண்ணார்பேட்டையில் உள்ள விஸ்வநாதன் வீட்டிற்கு மகள் காவேரியை தேடி சங்கரநாராயணனும், அவருடைய மனைவி செல்லம்மாளும் சென்றனர்.
அப்போது, வீட்டில் விஸ்வநாதனின் சகோதரி கல்பனா, அவருடைய குழந்தையுடன் இருந்தார். இருவரும் கல்பனாவை வெட்டிக்கொலை செய்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து பாளையங்கோட்டைஸ்காவலாளர்கள் வழக்குப்பதிந்து கணவன் - மனைவியை இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த வழக்கு திருநெல்வேலி 2-வது கூடுதல் மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அந்த விசாரணையின் முடிவில், கணவன் - மனைவி இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து 9.1.2017 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து, தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி அவர்கள் இருவரும் மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.விமலா, டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு:
"சங்கரநாராயணனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகிறது. அவருடைய மனைவி செல்லம்மாள் விடுதலை செய்யப்படுகிறார்.
இந்த வழக்கில் உயிரிழந்த கல்பனாவின் கணவருக்கு இழப்பீடாக ரூ.8 இலட்சத்து 25 ஆயிரத்தை அரசு வழங்க வேண்டும் என்ற திருநெல்வேலி நீதிமன்றத்தின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது.
உயிரிழந்த பெண்ணின் மகனுக்கு 21 வயது ஆகும் வரையிலோ அல்லது அவர் பட்டப்படிப்பை முடிக்கும் வரையிலோ மாதந்தோறும் பராமரிப்பு தொகையாக ரூ.11 ஆயிரத்து 600-ஐயும் அரசு வழங்க வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.