மோடிக்கு எதிர்ப்பு காட்ட நூற்றுக்கணக்கில் புறப்பட்ட திமுகவினர்; கருப்பு சட்டை அணிந்து வாகனங்களில் ஊர்வலம்...
வேலூர்
மோடி சென்னை வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூரில் நூற்றுக்கணக்கில் தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து இருசக்கர வாகங்களில் ஊர்வலமாக சென்றனர்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் இராணுவ கண்காட்சியைத் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழத்தை வஞ்சித்துவிட்டு தமிழகத்திற்கு வருகை தர மோடிக்கு என்ன திராணி இருக்கிறது என்றும், மோடி தமிழ்நாட்டுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருப்புக்கொடி காட்டப்போவதாக தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவித்திருந்தன.
இந்த நிலையில் இராணுவ கண்காட்சியை தொடங்கிவைக்க பிரதமர் மோடி நேற்று சென்னைக்கு வந்தார். அவருக்கு எதிர்ப்புதெரிவித்து வேலூரில் தி.மு.க.வினர் ஊர்வலம் நடத்தினர்.
கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமையில் கருப்பு சட்டை அணிந்து, கருப்பு பலூன்களுடன் நகர தி.மு.க. அலுவலகத்தில் இருந்து இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானம், கோட்டை, பழைய பேருந்து நிலையம், காட்பாடி சாலை வழியாக கிரீன் சர்க்கிள்வரை சென்று பின்னர் அங்கிருந்து மீண்டும் தி.மு.க. அலுவலகத்தை அடைந்தனர்.
ஊர்வலத்தில் சென்றவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு மத்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து முழக்கமிட்டனர். இதில் அவைத் தலைவர் முகமதுசகி உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.