எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது !! தொற்று இருக்குமா டாக்டர்கள் விளக்கம் !!
சாத்தூர் அரசு மருத்துவமனையில் எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட இளம் பெண்ணுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த அந்த சிசுவுக்கு எச்ஐவி நோய் தொற்று உள்ளதா ? இல்லையா? என்பது 45 நாட்களுக்குப் பின்னரே தெரிய வரும் என டாக்டர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி பாதிப்புள்ள ரத்தத்தை ஏற்றியது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, விசாரணையை தொடங்கியது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு 9 டாக்டர்கள் அடங்கிய மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. சுக பிரசவம் நடந்ததால் மருத்துவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதே நேரத்தில் 45 நாட்களுக்கு பின்னரே குழந்தைக்கு தொற்று இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியவரும் என டாக்டர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.