இன்னும் மூணு நாளைக்கு லேசான மழைதான்… தீபாவளி அன்னைக்கிலிருந்தது வெளுத்து வாங்குமாம்…
வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடலோர மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வரும் நிலையில், அடுத்த மூன்று நாட்களுக்கு லேசான மழை மட்டுமே இருக்கும் என்றும், தீபாவளியன்று வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் என்பதால் அன்றிலிருந்து மழை வெளுத்து வாங்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக தமிழகம் மற்றும் கேரளாவின் இதர பகுதிகளுக்கு பரவி மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது..
இந்டிநிலையில் சென்னையில் கடந்த 4 நாட்களாக மழை பெய்ததால் இதமான குளிர் நிலவுகிறது. இந்த மழையால் நிலத்தடி நீர் மட்டமும் ஓரளவுக்கு உயர்ந்து இருக்கிறது. இன்று சென்னையில் மழை இல்லை. வெயிலின் தாக்கம் சற்று அதிகம் இருந்தது.
அதே நேரத்தில் கடலோர மாவட்டங்களிலும் தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனிடையே தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையையொட்டியுள்ள பகுதியில் காற்றழுத்த பகுதி நீடிக்கிறது. தென் தமிழகத்திலும் அதனை யொட்டியுள்ள பகுதியிலும் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள கடலோர கர்நாடகாவில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு மற்றும் கேரளா, தெற்கு உள் கர்நாடகா, ஆந்திராவின் ராயலசீமா பகுதிகளிலும் தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தைப் பொறுத்தவரை 4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை அடுத்து வரும் 3 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை ஏதும் இல்லை என்றும், தீபாவளியன்று வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் என்பதால் அதன் பிறகு தமிழகம் முழுவதும் மழை வெளுத்து வாங்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.