விடிய விடிய பெய்து வரும் கனமழை !! குளிரில் நனைந்தது சென்னை !!
வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து தமிழகம் மற்று புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் விடிய விடிய கனமழை பெய்து வருவதால் நகரமே குளிர்ச்சி அடைந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்றே தமிழகத் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தி.நகர், அண்ணாநகர், திருவல்லிக்கேணி, விமான நிலையம், பல்லாவரம், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி, பம்மல், ஆவடி, அம்பத்தூர், பாடி, அயனாவரம், எழும்பூர், முகப்பேர் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களிலும், சென்னையின் புறநகர் பகுதிகளிலும் இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால் சென்னை நகரமே குளிரில் நனைந்து வருகிறது. சூடு தணிந்து குளுமை அடைந்துள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.
இதனிடையே புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் வில்லியனூர், அரியாங்குப்பம், திருவாண்டார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.