சென்னையில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழை ! இன்னைக்கும் சூப்பரா பெய்யுமாம் !!
சென்னையில் நேற்று நள்ளிரவில் இடி,மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. இன்று காலையிலும் சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் இன்றும் சென்னை உட்பட வட தமிழகத்தில கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நீண்ட நாட்களாக மழை இல்லாத காரணத்தில் கடும் தண்ணிர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க தற்போத வேலூரில் இருந்து ரயில் தண்ணிர் கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பிறகு சென்னையில் மழை பெய்ததது. அன்று முதல் அவ்வப்போது தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் நகர் முழுவதும் குளிர்ச்சி நிலவியது. வடபழனி, கிண்டி, தாம்பரம், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதே போல் தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி உள்பட ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும்.
வட தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள நீலகிரி, கோவை, தேனி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது..