நலத்திட்டங்களின் விவரங்களை கேட்கும் ஆளுநர்… அதிகாரிகளை தயாராக சொன்ன தலைமை செயலாளர் இறையன்பு!
மத்திய மற்றும் மாநில அரசின் நலத்திட்டங்களின் நிலை, செயல்பாடுகள் உள்ளிட்ட விவரங்களை ஆளுநரிடம் சமர்பிக்க தயாராகுமாறு தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து அரசுத் துறை செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மக்கள் நலனுக்கும், மாநிலத்தின் நலனுக்கும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நலத் திட்டங்களின் நிலை, திட்டங்களின் செயல்பாடு போன்ற தகவல்களையும் அதற்கான ஆவணங்களையும் அரசு துறை செயலாளர்கள் வைத்திருப்பர். இந்த நிலையில் மத்திய மற்றும் மாநில அரசின் நலத்திட்டங்களின் நிலை மற்றும் செயல்பாடுகளின் விவரங்களை ஆளுநர் தமிழக தலைமை செயலாளர் இறையன்புவிடம் கேட்டுள்ளார்.
இதை அடுத்து அனைத்து அரசுத் துறை செயலாளர்களுக்கும் தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் எந்த நிலையில் உள்ளது, அதன் செயல்பாடுகள் ஆகிய விவரங்களை ஆளுநருக்கு சமர்ப்பிக்க அரசுத் துறை செயலாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தயார் செய்த விவரங்களை பவர்பாயிண்ட்டில் தயார் செய்து வைத்து இருக்க வேண்டும் என்றும் எப்போது ஆளுநரிடம் பவர்பாயின்ட் பிரசெண்டேஷன் நடைபெறும் என்று பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தனது சுற்றறிக்கையில் தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.