ரேஷன் கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டம் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது மார்ச் மாதம் வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் காலம் ஒவ்வொரு ஆண்டும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை சிறப்பு பொது விநியோகத் திட்டம் நடைமுறையில் உள்ளது.

இதற்கிடையே, சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொருட்களைப் பெற குடும்ப அட்டைதாரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும், அந்தத் திட்டத்தை நீட்டிக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஆணையாளர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், அவரது கோரிக்கையை ஏற்று, சிறப்பு பொது விநியோகத் திட்டம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, நடப்பு ஜனவரி மாதம் முதல் வரும் மார்ச் மாதம் வரை சிறப்பு பொது விநியோகத் திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்து உள்ளார்.
