சாலை அமைக்க நிலம் கொடுத்தால் அரசு வேலை - ஆட்சியரிடம் பொதுமக்கள் அதிரடி கோரிக்கை...
தருமபுரி
நான்கு வழி சாலை விரிவாக்க பணிக்காக நிலம் வழங்குபவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப அரசு பணி வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் தருமபுரி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இலவச வீட்டுமனை வழங்குவதற்கான பயனாளிகள் பட்டியலை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கொண்டகரஅள்ளி கிராம மக்கள், குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியரகத்தில் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) துர்காமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர்களுக்கு உத்தரவிட்டனர்.
இந்தக் கூட்டத்தில் வீட்டுமனைப்பட்டா, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, வங்கி கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்கள் கொடுத்திருந்தனர்.
இதில் கொண்டகரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில், "எங்கள் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் சொந்தவீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனைகள் வழங்க பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
அதில், வசதி படைத்தவர்கள், அரசு பணியில் இருப்பவர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே இலவச வீட்டுமனையை வாங்கியவர்களின் பெயர்களும் இதில் இடம் பெற்றுள்ளன. எனவே, இந்த பயனாளிகளின் பட்டியலை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
சொந்தவீடு இல்லாதவர்கள், ஏழ்மை நிலையில் உள்ளவர்களை இந்த பட்டியலில் இடம்பெற செய்து அதன்படி இலவச வீட்டுமனைகள் வழங்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர்.
அதேபோன்று, பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சிலர் கொடுத்த கோரிக்கை மனுவில், "தர்மபுரி - ஓசூர் இடையே நான்கு வழிசாலை விரிவாக்க பணிக்காக நிலம் வழங்குபவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப அரசு பணி வழங்க வேண்டும்.
சாலைக்கு நிலம் எடுக்கும் பரப்புக்கு ஏற்றவாறு வாடகை வழங்க வேண்டும். கையகப்படுத்தப்படும் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், வீடுகள், மரங்களுக்கு அதிகபட்ச இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.
சாலை விரிவாக்கத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு மாற்று இடத்தில் நிலம் வழங்கினால் பத்திரவு பதிவு முத்திரைதாள் செலவினை முழுமையாக அரசே ஏற்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருந்தனர்.