விசா விதிமுறையை மீறி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக ருமேனியா நாட்டைச் சேர்ந்தவரிடம் குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரது விசாவை ரத்து செய்து சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

விசா விதிமுறையை மீறி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக ருமேனியா நாட்டைச் சேர்ந்தவரிடம் குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரது விசாவை ரத்து செய்து சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் கோவை மாநகராட்சியில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக நிகோட்டா ஸ்டெஃபன் மெரிஸ் என்ற வெளிநாட்டவர் சிங்காநல்லூர் பகுதியில் பொது மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

ருமேனிய நாட்டைச் சேர்ந்த இவர் தொழில் நிமித்தமாக பிசினஸ் விசாவில் கோவைக்கு வந்துள்ளார்.திமுகவை சேர்ந்த மருத்துவர் கோகுல் என்பவரின் நண்பரான ஸ்டெஃபன், தனது நண்பரின் மூலம் தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களை பற்றி அறிந்து பரப்புரையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.தோளில் திமுக துண்டு அணிந்தவாறு, சாலையில் நடந்து சென்றும், இரண்டு சக்கர வாகனம் மற்றும் பேருந்துகளில் பயணித்தும் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் கொடுத்து திமுகவுக்கு ஆதரவு திரட்டினார். 

தமிழக அரசின் இந்த திட்டத்தால் ஈர்க்கப்பட்டு திமுகவிற்கு ஆதரவாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக நிகொய்டா தெரிவித்தார் .இவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இது சர்ச்சையையும் ஏற்படுத்தியது.இதையடுத்து விசா விதிமுறையை மீறி நிகொய்டா செயல்பட்டதாகவும் அதற்குரிய விளக்கத்தை அளிக்கும்படி குடியுரிமை அதிகாரிகள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அதன்படி இன்று மதியம் 12.10 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள குடியுரிமை அலுவலகத்தில் விசாரணைக்காக நிகொய்டா ஆஜரானார். 

அப்போது கார் ஒன்றில் தொப்பி அணிந்தபடி நிகொய்டா அவசர அவசரமாக குடியுரிமை அலுவலகத்திற்குள் சென்றார். விசா விதிமுறையை மீறியது தொடர்பாக விசாரணைக்கு அவர் ஆஜரானார். குறிப்பாக தொழில் செய்வதற்காக பிசினஸ் விசாவில் வந்த நிகொய்டா, விசா விதிமுறைகளை மீறி அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பாக குடியுரிமை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விசாரணையின் அடிப்படையில் அடுத்தக்கட்டமாக ருமேனியா நாட்டை சேர்ந்த நிகொய்டாவின் விசாவை ரத்து செய்து ருமேனியாவிற்கு திருப்பி அனுப்ப வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.