மக்கள் போராட்டத்தின் எதிரொலி; ஊருக்குள் சாராயம் விற்ற பெண் அதிரடி கைது...
தருமபுரி
தருமபுரியில் சில்லறை விற்பனையில் சாராயம் விற்ற பெண்ணை காவலாளர்கள் கைது செய்தனர். மக்கள் சாலை மறியல் போராட்டத்தின் எதிரொலியாக காவலாளர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ரேகடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் (33).
இவர், வியாழக்கிழமை இரவு அந்த ஊரில் அரசு அனுமதியின்றி விற்பனை செய்யும் ஒருவரிடமிருந்து சாராயம் வாங்கி குடித்தாராம். இதனால், தமிழரசன் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்.
இந்த நிலையில், கிராமத்தில் சில்லறையாக சாராயம் விற்பனை செய்வதால் குடிப் பழக்கத்தால் இளைஞர்கள் பாதிக்கின்றனர் என்று புகார் எழுந்தது.
இதனையடுத்து இதனை தடுக்க கோரி ரேகடஹள்ளி கிராம மக்கள் பொம்மிடி - கடத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, காவலாளர்களின் சமாதானத்துக்கு பிறகு மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியல் காரணமாக கடத்தூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து, அரசு அனுமதியின்றி சாராயம் விற்ற ரேகடஹள்ளியைச் சேர்ந்த ராணி (65) என்பவரை பொம்மிடி காவலாளர்கள் கைது செய்தனர்.