உங்க டிரைவிங் லைசென்ச இனி ஒரு மணி நேரத்தில் ரெனுவல் பண்ணலாம் … தமிழக அரசு அதிரடி…
தமிழகத்தில் பழகுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்டவைகளை 1 மணி நேரத்தில் செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் சைக்கிள் ஓட்டுவதற்கே லைசென்ஸ் தேவைப்பட்டது. அப்போது லைசென்ஸ் இருந்தாலும் பொது மக்கள் போலீசுக்கு பயந்து பயந்து ஓட்டினார்கள். இப்போது பலபேர் லைசென்ஸ் இல்லாமல், மோட்டார் சைக்கிளே ஓட்டுகிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறு என்பதை ஆபத்து வரும்வரை உணரமாட்டார்கள்.
அதே நேரத்தில் டிரைவிங் லைசென்ஸ் பெற 'ஏகப்பட்ட படிவங்களை நிரப்ப வேண்டும். பின்னர் ஆர்டிஓ அலுவலகத்தில் கால் கடுக்க வரிசையில் நிற்க வேண்டும் என்று எத்தனையோ கஷ்டங்கள் இருந்தன. ஆனால் அந்த நடைமுறைககள் எல்லாம் தற்போது கொஞ்சம், கொஞ்சமாக மாறிவிட்டது.
தற்போது அதற்கான நடைமுறைகள் இலகுவாக்கப்பட்டு லைசென்ஸ் ஈஸியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காலாவதியாகிப்போன பழகுநர் மற்றும் ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிப்பதற்கான நடைமுறைகளும் இலகுவாக்கப்பட்டுள்ளன.
டிரைவிங் லைசென்ஸ் அதிகபட்சமாக 20 வருடங்களுக்குச் செல்லுபடியாகும். அதாவது, அந்த 20 வருடங்கள் உங்கள் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். 50 வயதுக்கு மேல் 5 வருடத்துக்கு ஒரு முறை உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் புதுப்பிக்கும்போது மருத்துவர் உங்களைப் பரிசோதித்து மனநிலை மற்றும் உடல்நிலை வாகனம் ஓட்டுவதற்கு உகந்ததாக இருக்கிறது எனச் சான்றளிக்க வேண்டும். அதேபோல் நீங்களும் 'என்ன மனநிலையும் உடல்நிலையும் சரியாக இருக்கிறது’ என ஒப்புதல் அளிக்க வேண்டும்.
தற்போது அந்த நடைமுறைகள் எல்லாம் மாற்றப்பட்டு ஒரு மணி நேரத்தில் லைசென்சை ரெனுவல் பண்ணலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர், பழகுநர் மற்றும் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகளுக்கு இணையதளம் மூலம் உரிய படிவத்தை பூர்த்தி செய்து உரிய கட்டணம் மற்றும் சான்றுடன் அனுப்பினால் 1 மணி நேரத்தில் ரெனுவல் செய்துவிடலாம் என கூறினார். இது விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்