வித்தியாசமான பொங்கல்..வெள்ளை சேலைக்கட்டி பொங்கல் வைத்த பெண்கள்..விநோத வழிபாட்டின் பின்னணி..
சிவகங்கை அருகே பொங்கல் விழாவில் பெண்கள் வெள்ளை சேலை உடுத்தி பொங்கல் வைத்தனர்.
தைமாதத்தின் முதல்நாள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடபடுகிறது. புது பானையில் பொங்கல் வைத்து, சூரியனுக்கு படைத்து இயற்கைக்கும் உழவர்களுக்கும் நன்றி சொல்லும் நாளாக விதமாக பொங்கல் திருநாள் தமிழர்களால் கொண்டாப்படுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் ஒரு பழமொழியே உண்டு. தமிழர்களின் வாழ்வியலில் தைப்பொங்கல் முக்கியமான திருவிழாவாக சங்ககாலம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
அடுத்தநாள் உழுவுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளை வழிப்படும் திருநாளாக மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. நேற்று பல்வேறு இடங்களில் தாங்கள் வளர்க்கும் மாடுகளை நீராட்டி, குங்கமம் இட்டு, பூஜை செய்து பொங்கல் வைத்து வழிப்பட்டனர். இதனையொட்டி மாடுகளுக்கும் தமிழர்களுக்கும் உள்ள பிணைப்பை பறைச்சாற்றும் வகையிலே ஜல்லிக்கட்டு போட்டி, மஞ்சு விரட்டு, எருது விடும் விழா போன்ற விளையாட்டுகளிலும் நம்முடைய வாழ்வியலில் உள்ளன.
இந்நிலையில் சிவகங்கை அருகே பொங்கல் விழாவில் பெண்கள் வெள்ளை சேலை உடுத்தி பொங்கல் வைத்து விநோத வழிப்பாடு நடத்தியுள்ளனர்.சிவகங்கை அருகே மதகுபட்டி கீழத்தெரு, மேற்குத்தெரு, சலுகைபுரம் பகுதிகளில் அதிகளவில் ஒரு சமூகத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் தனித்தனியாக காவல் தெய்வங்களாக பிடாரி அம்மன், பொன்னழகி அம்மனை தரிசித்து வருகின்றனர். நேற்று மாட்டு பொங்கலையொட்டி, தனித்தனியாக பெண்கள் வளையல், மெட்டி, கொலுசு தவிர்த்து வெள்ளை சேலை உடுத்தி அம்மனுக்கு பொங்கல் வைத்தனர்.
அம்மனுக்கு நேர்த்திக்கடனாக கரும்புத் தொட்டில் கட்டினர். தொடர்ந்து காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இளைஞர்கள் காளைகளை அடக்கினர். விழா முடிந்ததும் மாலையில் மேலத்தெரு, கீழத்தெருவில் நேர்த்திக்கடன் கரும்புகள், விரதமிருந்து அம்மன் காலடியில் வைத்த எலுமிச்சை ஆகியவற்றை ஏலம் விட்டனர்.
இந்த ஏலத்தில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பங்கேற்றனர்.
கரும்பு, எலுமிச்சையை ஏலம் எடுத்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை. இதனால் அவற்றை போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். மேலத்தெருவில் ஒரு கரும்பு அதிகபட்சமாக ரூ.17,301-க்கும், கீழத்தெருவில் ஒரு எலுமிச்சை ரூ.40,001-க்கும் ஏலம் விடப்பட்டது.