உள்ளாட்சி தேர்தலையொட்டி இன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள வார்டுகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக மாநகராட்சி பகுதிகளில் 15,158 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி பகுதிகளில் 7,417 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சி பகுதிகளில் 8,454 வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் உள்ளன. 

சென்னை தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் மு.வே.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ‘தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920-ன்படி தேர்தல் நடைபெறும் நாளன்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் வாக்களிக்க ஏதுவாக இன்று (பிப்.19) ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்’ என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.