கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சகோதரி பொற்கொடிக்கு உறுதி அளித்ததாக தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின்,  கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது என கூறியுள்ளார்.  

ஆம்ஸ்ட்ராங் படுகொலை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இரண்டு தினங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். பெரம்பூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய வீட்டை பார்வையிட வந்தவரை சுற்றி வளைத்த 6 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் கொலை சம்பவம் தொடர்பாக 11 பேர் சரண் அடைந்தனர். ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டதற்கு பழி வாங்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷ் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் காவல்நிலையத்தில் சரண் அடைந்த குற்றவாளிகள் உண்மையானவர்கள் இல்லையென்றும் சம்பந்தம் இல்லாதவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். 

எனவே இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும், இந்த கொலைக்கு பின்னால் இருப்பது யார் என்ற கேள்விக்கு விடை தெரிய வேண்டும் என கூறிவருகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு சென்று உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு ஆறுதல் கூறினார். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களது மறைவையொட்டி, பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று அவரது திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி, துயரில் வாடும் அவரது மனைவி திருமதி. பொற்கொடி அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.

Scroll to load tweet…

கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சகோதரி பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது. இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும்! காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.