500 ரூபாய் வச்சுக்குங்க… அப்புறமா குப்பை கொட்டுங்க.. சென்னை மாநகராட்சி அதிரடி
சென்னையில் பொது இடங்களில் குப்பைகள் கொட்டினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை: சென்னையில் பொது இடங்களில் குப்பைகள் கொட்டினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் பல நேரங்களில் எங்கு பார்த்தாலும் மனித நடமாட்டம் எந்தளவுக்கு இருக்கிறதோ அதே போன்று குப்பைகளும் நிறைந்திருப்பது வாடிக்கையான ஒன்று. இந்த குப்பை கொட்டுவதை தடுக்க சென்னை மாநகராட்சி பல்வேறு திட்டங்களை எடுத்தாலும் குப்பைகள் சேருவதையோ, அதை கண்ட இடங்களில் கொட்டுவதையோ தடுக்க முடியவில்லை.
இந் நிலையில் பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் கொட்டினால், தூக்கி எறிந்தால் அவர்களுக்கு இனி 500 ரூபாய் அபராதம் என்று படு ஸ்டிரிக்டாக அறிவித்திருக்கிறது சென்னை மாநகராட்சி. சென்னையை குப்பையில்லா மாநகரமாக்கும் நடவடிக்கைகளில் இதுவும் என்று தெரிவித்துள்ள சென்ன மாநகராட்சி தேவையற்ற திடக்கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்படுவதாக புகார்கள் அதிகம் வந்துள்ளது என கூறி உள்ளது.
பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை தூக்கி எறிபவர்கள், வாகனங்களில் இருந்தபடியே கொட்டுபவர்கள் ஆகியோருக்கு 500 ரூபாய் அபராதமும், சாக்கடை மற்றும் திரவ கழிவுகளை நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களில் கொட்டுபவர்களுக்கு 100 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இந்த விதிகளுக்கு கட்டுப்பட்டாவது மக்கள் இனி குப்பைகளை முறையாக கொட்ட வேண்டும் என்பது தான் இப்போது அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.