10,12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

10,12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் சற்று குறைந்துள்ளதால் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கண்டிப்பாக 10, 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இந்நிலையில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 (நாளை) தொடங்கி பிப்ரவரி 15ம் தேதி வரை நடைபெறும். இதற்கு மாணவர்களை தயார் செய்யும் வகையில் திருப்புதல் தேர்வையே பொதுத்தேர்வு போன்று நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறு தேர்வு முடிந்தபின் இதன் விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளில் மதிப்பீடு செய்யக்கூடாது. ஆகவே திருப்புதல் தேர்வை, பொதுத்தேர்வை போன்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித்துறை வழங்கியது. பொதுத்தேர்வுக்கு முன்னதாக 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களை தயார்படுத்தும் வகையில் திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. அவ்வகையில் 10ம் வகுப்புக்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு வரும், 9ம் தேதி துவங்கி 15 வரையும், இரண்டாம் கட்ட தேர்வு மார்ச் 28ம் தேதி துவங்கி ஏப்ரல் 4 வரையும் நடத்தப்படுகிறது. இதேபோல் 12ம் வகுப்புக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு வரும் 9ம் தேதி தொடங்கி 16 வரையும், இரண்டாம் கட்ட தேர்வு மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதியும் முடிகிறது.

பொதுத்தேர்வைப்போல் திருப்புதல் தேர்வும் நடத்தப்படவுள்ளதால் அனைத்து மாவட்ட பள்ளிகளில் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், 10,12ம் வகுப்புகளுக்கு நாளை மறுநாள் நடைபெற இருந்த திருப்புதல் தேர்வு வரும் 17ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 10ம் தேதி உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெறுவதால் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. எனவே 10,12 ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்திற்கான தேர்வுத்தேதி மாற்றம் குறித்த விபரத்தினை முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் வாயிலாக அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அறியும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.