பூம் பூம் மாட்டுக் காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் - தமமுக தீர்மானம்...
ஈரோடு
பூம் பூம் மாட்டுக் காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோட்டில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு அதன் மாவட்ட தலைவர் அ.செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மயில்துரையன், மாவட்ட நிர்வாகிகள் குமரேஷ், குணசேகரன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இந்தக் கூட்டத்தில், "ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்றுவந்த லாட்டரி மற்றும் மது விற்பனையை முற்றிலும் தடை செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நன்றி.
பவானி ஆற்றில் மணல் கடத்தலை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வருகிற 3, 4–ஆம் தேதிகளில் ஈரோடு மாவட்டத்திற்கு வருமை தரும் நிறுவன தலைவர் பெ.ஜான்பாண்டியனுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது.
மேலும், 50–க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சி கொடி ஏற்றி வைத்து பெயர் பலகை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குவது.
ஜூலை 15–ஆம் தேதி தஞ்சையில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு ஈரோட்டில் இருந்து 50 வாகனங்களில் செல்வது.
ஈரோட்டில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டு மோசமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்.
பூம் பூம் மாட்டுக் காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
ஈரோடு நரிப்பள்ளம், அக்ரஹாரம், சூரம்பட்டி, கங்காபுரம், வெண்டிபாளையம், சித்தோடு, வெட்டுக்காட்டுவலசு, தண்ணீர்பந்தல்பாளையம், பிச்சைக்காரன்பாளையம், காடையம்பட்டி, சூளை, மாணிக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் சாய மற்றும் தோல் தொழிற்சாலைகள் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றி வருகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட ஆலைகள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெருந்துறை சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் சாய ஆலைகளால் நீர் முற்றிலும் மாசு அடைந்துள்ளது. மேலும் இந்த பகுதியில் புற்றுநோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு காரணமான சாய ஆலைகளை நிரந்தரமாக மூடுவதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ராமு, பூபதி, துரைசாமி, மகளிர் அணி நிர்வாகிகள் சத்யா, நித்யா, அன்னக்கொடி உள்பட பலர் பங்கேற்றனர்.