வலுவடைந்து வேகம் எடுக்கும் பெய்ட்டி புயல்… சென்னையில் இன்று கொட்டித் தீர்க்கப்போகுது மழை… ஆந்திராவுக்கு ரெட் அலர்ட் !!
வங்கக் கடலில் உருவான பெய்ட்டி புயல் தற்போது வலுவடைந்து கரையே நோக்கி 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதால் வட தமிழக கரையோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை கொட்டித் தீர்க்கும் என்றும், பலத்த கடற்காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கஜா புயல் தமிழகத்தை புரட்டிப் போட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு புயல் வங்கக்கடலில் உருவாகியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்தது நேற்று இரவு புயலாக வலுவடைந்தது.
இந்த புயல் கரையை கடக்கும் நேரத்தில் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டால் பெய்ட்டி என பெயரிடப்பட்டுள்ள இப்புயல் நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கே 590 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும் நேரத்தில் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையைப் பொறுத்த வரையிலும் வடகடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் சில இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
மீனவர்கள் தெற்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய தெற்கு வங்ககக்கடல் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயல் வரும் முன்னரே சென்னை உள்ளிட்ட இடங்களில் தரைக்காற்றின் வேகம் மணிக்கு 20 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது.
சென்னை எண்ணூர், திருவெற்றியூர், காசிஅமட்டில் கடல் சீற்றம் அதிகரித்துக் காணப்படுகிறது. கடல் அலைகள் ஆக்ரோஷத்துடன் தடுப்புச் சுவற்றைத் தாண்டி சாலை வரை வந்து செல்கிறது. மெரீனா கடலிலும் கடும் கடல் சீற்றம் காணப்பபடுகிறது.
நாகை மாவட்டம் பேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. ஆறுகாட்டுத்துறை, கோயைக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ம் பகுதிகளிலும் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இதனிடையே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆந்திர அரசு முடுக்கிவிட்டுள்ளது. மாநில பேரிடர் மேலாண்மைக்குழுவுடன் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். விசாகப்பட்டினம், கோதாவரி கிழக்கு, மேற்கு மற்றும் குண்டூர் மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடலோர மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அங்கு ரெட அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.