ஊதிய உயர்வு கேட்டு சீருடையில் ஆர்ப்பாட்டம் நடத்திய அங்கன்வாடி ஊழியர்கள்; கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம்...
திருவள்ளூர்
திருவள்ளூரில், "ஊதிய உயர்வு வேண்டும்" போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்..
திருவள்ளூர் மாவட்டம், எம்.ஜி.ஆர். சிலை அருகே அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.ராணி தலைமைத் தாங்கினார். பொருளாளர் உமாராணி வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் ஆர்.இலட்சுமி விளக்கவுரை அளித்தார்.
மாநிலத் துணைத் தலைவர் பா.சித்திரச்செல்வி, மாவட்டத் துணைத் தலைவர் ருக்மணி, நிர்வாகிகள் மோகனா, சரோஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலப் பொதுச் செயலாளர் டி.டெய்சி இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் புதுச்சேரி அரசு வழங்குவது போல், இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும்,
ஆண்டுதோறும் கோடை விடுமுறை அளிக்கப்பட வேண்டும்,
முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அருள்டேனியல், செயலாளர் எஸ்.காந்திமதிநாதன் மற்றும் ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள் தங்களது சீருடையில் பங்கேற்று அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு வலுசேர்த்தனர்..