குழந்தைகளைக் கொன்ற அபிராமிக்கு சிறை !! புழலில் அடைப்பு !!
கள்ளக் காதலுக்காக தனது சொந்த குழந்தைகளை விஷம் வைத்துச் கொன்ற குன்றத்தூரைச் சேர்ந்த அபிராமி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை திருவள்ளுவர் நகர், அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருபவர் விஜய் இவர், சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வீடுகள் வாங்க, கடன் வாங்கி கொடுக்கும் பிரிவில் வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி அபிராமி இவர்களுக்கு அஜய் என்ற மகனும், கார்னிகா என்ற மகளும் இருந்தனர். மாத கடைசி என்பதால் நேற்று முன்தினம் விஜய், நிலுவையில் உள்ள ஆவணங்களை முடிக்க மதியம் வங்கிக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவருடைய மனைவியும், குழந்தைகளும் மட்டும் இருந்தனர்.
வேலை அதிகம் இருந்ததால் விஜய், நேற்று முன்தினம் இரவு வங்கியில் தங்கி விட்டார். நேற்று அதிகாலையில் அவர், தனது வீட்டுக்கு வந்தார். வீட்டின் வெளியே அபிராமியின் மொபட் இல்லை. எனவே அருகில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று இருக்கலாம் என்று கருதிய விஜய், தனது மாமியார் வீட்டுக்கு சென்றார்.
ஆனால் அபிராமி அங்கு வரவில்லை என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த விஜய், தனது மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.
இதனால் பதறிப்போன விஜய், மீண்டும் தனது வீட்டுக்கு சென்று பார்த்தார். வீட்டின் கதவு சாத்தப்பட்டு, வெளிப்புறமாக தாழ்ப்பாள் மட்டும் போடப்பட்டு இருந்தது. விஜய், கதவை திறந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.
அங்கு தனது 2 குழந்தைகளும், வாயில் நுரை தள்ளிய நிலையில் கட்டிலில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். குழந்தைகளின் உடலை பார்த்து விஜய் கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
தனது 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, போலீசுக்கு பயந்து அபிராமி தப்பிச்சென்று விட்டது தெரிந்தது. இதுபற்றி குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் அபிராமிக்கும் பிரியாணி கடையில் வேலை பார்க்கும் சுந்தரம் என்பருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுந்தரத்தைக் கைது செய்த போலீசார் அவரின் செல்போன் மூலம் பேசி நாகர்கோவிலில் வைத்து அபிராமியைக் கைது செய்தனர்.
இதையடுத்து சென்னை அழைத்துவரப்பட்ட அபிராமியிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர். தொடர்நது விசாரணை நடைபெற்று வருகிறது.