சிறுவர்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டினால் பாதுகாவலர் மீது வழக்கு - நீதிபதி எச்சரிக்கை...
திருவண்ணாமலை
சிறுவர்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டினால் பாதுகாவலர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி எச்சரித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது.
திருவண்ணாமலை ஹெப்ரான் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த முகாமிற்கு பள்ளித் தாளாளர் பி.டி.எல். சங்கர் தலைமை தாங்கினார். வழக்குரைஞர் பாசறை பாபு, ஒருங்கிணைப்பாளர் சையத் ரஷீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்வி உரிமைச் சட்டங்கள், குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், சார்பு நீதிபதியுமான கே.ராஜ்மோகன், அடிப்படைச் சட்டங்கள், மோட்டார் வாகனச் சட்டம் குறித்து தலைமை குற்றவியல் நீதிபதி ஆர்.நாராஜா ஆகியோர் பேசினர்.
மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியது:
"பள்ளி மாணவ, மாணவிகள் பாடத்தை மட்டும் படிக்காமல் வரலாறு, சமூகம் சார்ந்த புத்தகங்களைப் படிப்பதால் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும்.
குழந்தைகளைப் பாதுகாக்கும் இளம் சிறார் சட்டங்கள், குழந்தைகளுக்குள்ள அடிப்படை உரிமைகள் குறித்து மாணவ, மாணவிகள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
சிறுவர்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது. மீறி ஓட்டினால் பாதுகாவலர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இந்த முகாமில் பள்ளி முதல்வர் திலகவதி, பள்ளி ஆசிரியர்கள் தமிழ்வேந்தன், அருள், ராஜேஷ், சபினா, ரேவதி, இலக்கியா உள்பட பலர் பங்கேற்றனர்.