50 ரூபாய் புடவையால் ஜவுளிக்கடைக்கு வந்த சிக்கல்….. ஏமாற்றம் அடைந்த பெண்கள்
தென்காசி அருகே 50 ரூபாய்க்கு புடவை விற்ற ஜவுளிக்கடைக்கு அதிகாரிகள் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
தென்காசி: தென்காசி அருகே 50 ரூபாய்க்கு புடவை விற்ற ஜவுளிக்கடைக்கு அதிகாரிகள் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் புதியதாக ஜவுளிக்கடை ஒன்று திறக்கப்பட்டது. மக்களை கவரவும், வாடிக்கையாளர்களிடம் விளம்பரமாகவும் இருப்பதற்காக அந்த கடையினர் ஒரு முக்கிய காரியத்தை செய்தனர்.
அதாவது ஒரு நோட்டீஸ் அடித்து பார்க்கும் இடங்களில் எல்லாம் வினியோகித்தனர். அந்த நோட்டீசில் கடை திறப்பு நாளில் வரும் 3000 பேருக்கு 50 ரூபாய்க்கு சில்க் புடவை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
அவ்வளவுதான்…. இந்த விளம்பரம் தீயாய் தென்காசி முழுவதும் பரவ மக்களே அந்த கடையை நோக்கி குவிய ஆரம்பித்தனர். அதிகாலை முதலே திரண்ட பெண்கள் உள்ளிட்ட பலர் புடவையை அள்ளி சென்றனர்.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் கடையில் குவிந்ததால் அங்கு திடீர் பரபரப்பு உருவானது. இந் நிலையில் கொரோனா விதிகளை மீறியதாகவும், ஊரடங்கு கட்டுப்பாட்டை பின்பற்றவில்லை என்று கூறியும், மாவட்ட நிர்வாகம் கடை உரிமையாளருக்கு 10 ஆயிரம் அபராதம் விதித்து அதிரடி காட்டியது. 50 ரூபாய் புடவை அறிவிப்பாலும், மாவட்ட நிர்வாகத்தின் அதிரடியாலும் தென்காசி மாவட்டமே பரபரத்தது.