வெளியில் போனா குடையோட போங்க.... 4 நாள் இப்படித்தான் இருக்கும்
தமிழகத்தில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
சென்னை: தமிழகத்தில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை கொட்டி வருகிறது. கோவை, ஈரோடு, நீலகிரி, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பதிவானது.
இந் நிலையில் வரும் 12ம் தேதி வரை 4 நாட்கள் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் கூறி இருப்பதாவது:
வெப்பச்சலனம் காரணமாக வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழையை எதிர்பார்க்கலாம். சென்னையில் இன்று மழை பெய்யும்.
கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் வரும் 11ம் தேதி கனமழை பெய்யும்.
12ம் தேதி கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. நாளை குறைந்த தாழ்வழுத்த பகுதி உருவாக இருப்பதாக கணிக்கப்படுவதால் அந்தமான், வங்கக்கடல் பகுதிகளில் 50 கிமீ வரை பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.