மெரினா, எலியட்ஸ் கடற்கரையில் இனி வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் !! டூ வீலர், 4 வீலர்களுக்கு எவ்வளவு தெரியுமா?
சென்னை மெரினா மற்றும் எலியட்ஸ் பீச்சில் இனி இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னை வாசிகளுக்கு மிகப் போரிய பொழுது போக்காக அமைந்திருப்பது மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரைகள்தான். நாள்தோறும் இந்த பீச்சுகளில் பல்லாயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் கூடுகின்றனர். காதலர்களுக்கு கொளுத்தும் வெயில் இந்த கடற்கரையில் நிலவொளியாய் தோன்றும்.
அதுவும் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் லட்சக்கணக்கனோர் கூடுவார்கள். கடற்கரை மணல் அளவுக்கு மக்கள் தலைகளும் தென்படும். இந்த கடற்கரைகளுக்கு வருபவர்கள் பெரும்பாலும் உள்ளூர்வாசிகளாகத்தான் இருப்பார்கள்.
அவர்கள் 2 மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் குடும்பத்துடன் வந்து தங்களது பொழுதை மிக்க மகிழ்ச்சியுடன் கழித்துச் செல்கின்றனர், தற்போது வரை கடற்கரையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.
இந்நிலையில் கடற்கரைக்கு வரும் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி 4 சக்கர வாகனத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு 20 ரூபாயும், 2 சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு 5 ரூபாயும் வசூலிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பார்க்கிங் கட்டண முறை விரைவில் அமலபடுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது குடும்பத்துடன் சினிமாவுக்குச் செல்வதென்றால் கூட குறைத்து 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை செலவாகிறது.
இந்த நிலையில் கட்டணம் இல்லாமல் குடும்பத்துடன் பொழுதுபோக்கும் இடமாக இருப்பது பீச் ஒன்றுதான். தற்போது அதற்கும் ஆப்பு வைக்க சென்னை மாநகராட்சி எடுத்துள்ள முடிவை மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்களோ?