விவசாயியை நோக்கி சீறிய கட்டுவிரியன்..! பாம்பை கடித்துக் குதறி விசுவாசத்தை காட்டிய வளர்ப்பு நாய்கள்..!
எஜமானரை கடிக்க வந்த பாம்பை வளர்ப்பு நாய்கள் கடித்து கொன்றது.
கோவை மாவட்டம் ஒத்தக்கால்மண்டபம் அருகே இருக்கிறது பூங்காநகர். இந்த பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாய வேலை பார்த்து வரும் ராமலிங்கத்திற்கு சொந்தமாக தோப்பு மற்றும் வயல் நிலங்கள் இருக்கின்றன. தோட்டத்தில் ராமலிங்கம் மாடுகள் வளர்த்து வருகிறார். தினமும் அங்கு சென்று மாடுகளுக்கு தீவனம் வைப்பது அவரது வழக்கம்.
காவலுக்காக ராமலிங்கம் 3 நாய்களையும் வளர்த்து வருகிறார். தோட்டத்திற்கு செல்லும் நேரங்களில் நாய்களையும் அழைத்து செல்வார். வழக்கம் போல மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக தனது நண்பருடன் தோட்டத்திற்கு சென்றுள்ளார். 3 நாய்களும் உடன் சென்றுள்ளது. அப்போது வழியில் 6 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு அவர்களை நோக்கி சீறி வந்துதுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ராமலிங்கமும் அவரது நண்பரும் பின்வாங்கினர்.
அவர்கள் அருகே இருந்த நாய்கள் உடனடியாக பாம்பை கடித்து குதறத் தொடங்கின. நாய்கள் கடிதத்தில் பாம்பு உயிரிழந்தது. இந்த காட்சியை ராமலிங்கம் தனது செல்போனில் படம் பிடித்தார். அது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி இருக்கிறது. எஜமானரை தாக்க வந்த பாம்பை காவல் நாய்கள் கடித்து குதறி கொன்றது குறித்து அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பேசி வருகின்றனர்.