தம்பியின் பிரிவைத் தாங்க முடியாத அண்ணனும் அதே இடத்தில் தற்கொலை... ஒரே நேரத்தில் 2 மகன்களை இழந்த பெற்றோர்..!
சென்னையில் தம்பி தற்கொலை செய்ததும் அந்தப் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாத அண்ணன், அந்த அறைக்குச் சென்று மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தம்பி தற்கொலை செய்ததும் அந்தப் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாத அண்ணன், அந்த அறைக்குச் சென்று மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காசிமேடு, காசிதோட்டம், 2-வது தெருவை சேர்ந்தவர் அலெக் சாண்டர் (48). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் இருதயராஜ் (24), பி.டெக் படித்துள்ளார். இளைய மகன் ஆரோக்கிய ஆகாஷ் (23) பிஇ படித்துவிட்டு பிரபலமான ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார். 3 தளம் கொண்ட மாடியில் 2-வது மாடியில் உள்ள அறையில் இருதயராஜும், 3-வது மாடியில் உள்ள அறையில் ஆரோக்கிய ஆகாசும் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில். நேற்று இரவு ஆரோக்கிய ஆகாஷ், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது நண்பருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். உடனே நண்பரும், 2-வது மாடியில் இருந்த இருதயராஜும் 3-வது மாடியில் தங்கியிருக்கும் ஆரோக்கிய ஆகாஷ் அறைக்கு சென்றனர். அங்கு ஆரோக்கிய ஆகாஷ் தூக்கில் சடலமாக தொங்கியபடி இருந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆரோக்கிய ஆகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே மருத்துவமனைக்கு வந்த இருதயராஜை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்து அவரை பெற்றோர் தேடினர். 3வது மாடியில் ஆரோக்கிய ஆகாஷ் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தபோது, ஆரோக்கிய ஆகாஷ் இறந்த அதே இடத்தில் அதே துணியில் இருதயராஜும் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். ஒரே நேரத்தில் அண்ணன், தம்பி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.