உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்காக முதல் வெள்ளியை வென்ற அஞ்சும் முட்கில்; முதலிடத்தில் இந்தியா...
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் அஞ்சும் முட்கில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்றார்.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி மெக்ஸிகோவின் குவாதலஜரா நகரில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில், அஞ்சும் முட்கில் 454.2 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளி வென்றார்.
சீனாவின் ருய்ஜியாவ் பெய் 455.4 புள்ளிகளுடன் தங்கமும், சகநாட்டவரான டிங் சன் 442.2 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர்.
இந்தப் பிரிவில் பங்கேற்ற இதர இந்திய வீராங்கனைகளான காயத்ரி மற்றும் தேஜஸ்வினி சாவந்த் ஆகியோர் முறையே 15 மற்றும் 16-வது இடங்களைப் பிடித்தனர்.
ஆடவருக்கான 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் அனிஷ் பன்வாலா 578 புள்ளிகளுடன் 7-வது இடம் பிடித்தார்.
மற்றொரு இந்தியரான நீரஜ் குமார் 569 புள்ளிகளுடன் 13-வதாக வந்தார்.
இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள முதல் வெள்ளிப் பதக்கம் இதுவாகும். இத்துடன் இந்தியா 3 தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலம் என 8 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
சீனா 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது.