தம்பிங்களா … பட்டைய கௌப்பிட்டீங்கப்பா… இப்ப மட்டுமில்ல எப்பவுமே நாமதான் டாப்… இந்திய அணிக்கு வாழ்த்துத் தெரிவித்த சச்சின், கோலி !!
துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானைப் பந்தாடிய இந்திய அணிக்கு சச்சின் டெண்டூகர், விராட் கோலி ஆகியோர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 237 ரன்கள் எடுத்தது.
238 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்தியா சேசிங்கைத் தொடங்கியது. ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஷிகர் தவான் அதிரடி ஆட்டத்தையும், ரோகித் சர்மா நிதான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.
இவர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் பாகிஸ்தான் பந்துவீச்சாளார்கள் திணறினர். தவான், ரோகித் ஜோடி பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை நாலா புறமும் சிதறடித்தனர்.
இதையடுத்த இந்திய அணியின் ஸ்கோர் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது,
95 பந்துகளை சந்தித்த நிலையில் ஷிகர் தவான் தனது 15 சதத்தை அடித்து அசத்தினார். ஆசிய கோப்பை தொடரில் இது அவரது இரண்டாவது சதமாகும். பின்னர் 94 ரன்கள் எடுத்திருந்த போது ஒரு நாள் போட்டியில் 7 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோகித் சர்மா.
அணியின் எண்ணிக்கை 210 ஆக இருக்கும் போது தவான் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி 114 ரன்களில் வெளியேறினார். அடுத்து ராயுடு களமிறங்கிய சிறிது நேரத்தில் 106 பந்துகளில் தனது 19 ஒரு நாள் சதத்தை பதிவு செய்தார் ரோகித் சர்மா.
இறுதியில் 39.3 ஓவர்கள் முடிவில் 238 ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணியை அடித்து நொறுக்கி இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஓய்வில் இருக்கும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார். அதேபோல் சதம் அடித்த ரோகித் சர்மா, ஷிகர் தவானுக்கு சச்சின் தெண்டுல்கரும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விரைவாக 100 ரன்களைக் கடந்த தவான் மற்றும் ரோகித்துக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இதே போன்று விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் தம்பிங்களா … பட்டைய கௌப்பிட்டீங்கப்பா… இப்ப மட்டுமில்ல எப்பவுமே நாமதான் டாப் என தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.