பாராலிம்பிக் போட்டி.. வெள்ளிப் பதக்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன்..!
பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் மாரியப்பன் வெள்ளி பதக்கத்தையும், மற்றொரு இந்திய வீரர் சரத் குமார் வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தியுள்ளனர்.
பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் மாரியப்பன் வெள்ளி பதக்கத்தையும், மற்றொரு இந்திய வீரர் சரத் குமார் வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தியுள்ளனர்.
ஒலிம்பிக்ஸ் போட்டிகளைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24ம் தேதி தொடங்கி டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர்கள் அபாரமாக செயல்பட்டு பதக்க வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கங்களை வென்றிருந்தது.
இந்நிலையில், ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு பங்கேற்றார். ஏற்கனவே, கடந்த 2016ம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் 1.89 மீட்டர் உயரத்தை தாண்டி தங்க பதக்கம் வென்றிருந்தார். ஆகையால், இந்த முறையும் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும் மற்றொரு இந்திய வீரர் சரத் குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர். இதன்மூலம் தொடர்ந்து இரண்டு முறை பாராலிம்பிக்கில் பதக்கம் வென்று மாரியப்பன் சாதனை படைத்துள்ளார்.