இங்கிலாந்து தொடரில் ரோஹித் சர்மா ஆடுவாரா..?
முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய அணியில் இடம்பெறும் வீரர்களின் உடற்தகுதி அண்மைக்காலமாக மிகவும் தீவிரமாக பரிசோதிக்கப்படுகிறது. அதற்காக யோ-யோ டெஸ்ட் நடத்தப்படுகிறது.
யோ யோ டெஸ்டில் தேர்ச்சி பெறும் வீரர்களுக்கு மட்டுமே இந்திய அணியில் ஆட வாய்ப்பு கிடைக்கும். இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு தேர்வான வீரர்களுக்கு யோ யோ டெஸ்ட் நடத்தப்பட்டது. கடந்த 15ம் தேதி இந்த டெஸ்ட் நடத்தப்பட்டது.
இதில் விராட் கோலி, தோனி, ரெய்னா உள்ளிட்ட அனைத்து வீரர்களும் தேர்வாகினர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் ஆட வாய்ப்பு கிடைத்த அம்பாதி ராயுடு, யோ யோ டெஸ்டில் தேறாததால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சுரேஷ் ரெய்னா சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த 15ம் தேதி நடந்த டெஸ்டில் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா கலந்துகொள்ளவில்லை. அவர் ரஷ்யாவில் இருந்ததால், இந்த உடற்தகுதி பரிசோதனையில் கலந்துகொள்ள முடியவில்லை. அதனால் பின்னர் கலந்துகொள்வதாக பிசிசிஐ-யிடம் அனுமதி பெற்றிருந்தார்.
இதையடுத்து, இன்று யோ யோ டெஸ்டில் கலந்துகொள்ள உள்ளார். இந்த டெஸ்டில் தேர்ச்சி பெற்றால்தான் இங்கிலாந்து தொடரில் ரோஹித் சர்மா ஆடமுடியும்.
யோ யோ டெஸ்டில் தோல்வி அடைந்ததால், இந்தியா “ஏ” அணியில் ஆடும் வாய்ப்பை சஞ்சு சாம்சன் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.