இந்திய அணியின் ஓய்வறை ரகசியத்தை அம்பலப்படுத்திய இளம் வீரர்!!
இந்திய அணியில் ஓய்வறை உணர்வுகளை டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் ரிஷப் பண்ட் வெளிப்படுத்தியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் முடிந்த நிலையில், டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான அணி, கடந்த 18ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் இளம் வீரர் ரிஷப் பண்ட் இடம்பெற்றுள்ளார். அணியில் சீனியர் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக்குடன் ரிஷப் பண்ட்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் நடந்த இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடர் மற்றும் அங்கீகாரமில்லாத டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் சிறப்பாக ஆடினார். ஐபிஎல் தொடரிலும் அதிரடியாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். வித்தியாசமான ஷாட்களை ஆடும் ரிஷப் பண்ட், எந்த வரிசையில் களமிறக்கினாலும் சூழலுக்கு ஏற்றவாறு ஆடினார்.
ஐபிஎல் மட்டுமல்லாமல், இங்கிலாந்து மண்ணிலும் சிறப்பாக ஆடியதால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ரிஷப் பண்ட் அனைத்து விதமான போட்டிகளுக்கு ஏற்றவாறும் சூழலை உணர்ந்து ஆடக்கூடியவர் என்றும் அவரது முதிர்ச்சியான பேட்டிங்கை வெளிப்படுத்துவார் என்றும் இந்திய ஏ அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள ரிஷப் பண்ட், இந்திய அணியின் ஓய்வறை சூழல் குறித்த கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள ரிஷப் பண்ட், இந்திய அணியின் ஓய்வறையில் நேர்மறையான எண்ணங்களும் சிந்தனைகளுமே இருக்கிறது. சீனியர் வீரர்களுக்கு மத்தியில் எனக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக ஆடுவேன் என ரிஷப் பண்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.