வாழ்நாளில் சிறந்த பேட்ஸ்மேன் யார்..? காரணத்துடன் சொல்லும் ராகுல் டிராவிட்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் வாழ்நாளில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று கூறியுள்ளார்.
ராகுல் டிராவிட் 1996ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். 2012ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார். இந்திய அணியின் பெருஞ்சுவர் என அழைக்கப்படும் ராகுல் டிராவிட், அவர் ஆடிய காலக்கட்டத்தில் பல இக்கட்டான தருணங்களில் தனது திறமையான பேட்டிங்கால் இந்திய அணியை மீட்டெடுத்துள்ளார்.
2007 உலக கோப்பைக்கு இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் இந்தியாவின் கிரிக்கெட் எதிர்காலத்திற்கு தொடர்ந்து பங்காற்றிவருகிறார். 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணி மற்றும் இந்திய ஏ அணி ஆகியவற்றின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் டிராவிட், இந்திய அணிக்கு இளம் வீரர்களை உருவாக்கி கொடுக்கும் தலையாய பணியை செய்துவருகிறார்.
இந்நிலையில், ஸ்போர்ட்ஸ் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த ராகுல் டிராவிட்டிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றிற்கெல்லாம் வெளிப்படையாகவும் அதிரடியாகவும் பதிலளித்தார் ராகுல் டிராவிட்.
அப்போது உங்கள் வாழ்நாளில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு, சற்றும் யோசிக்காமல் சச்சின் டெண்டுல்கர் என கூறியுள்ளார். இதுதொடர்பாக டிராவிட் அளித்த பதிலில், சச்சினின் தரமான மற்றும் கிளாசிக் பேட்டிங்கின் காரணமாக சச்சினை தேர்வு செய்வேன் என ராகுல் டிராவிட் விளக்கமளித்துள்ளார்.
இருவரும் சுமார் 14 ஆண்டுகள் ஒன்றாக இணைந்து ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டிகளை பொறுத்தமட்டில் ராகுல் டிராவிட் - சச்சின் டெண்டுல்கர் ஜோடி குவித்த 331 ரன்கள் தான் இன்றளவிலும் இந்திய அணியின் அதிகபட்ச ஒருநாள் பார்ட்னர்ஷிப் ஸ்கோராக இருப்பது குறிப்பிடத்தக்கது.