#TokyoOlympics பேட்மிண்டனில் வெண்கல பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் பி.வி.சிந்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மிண்டனில் சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவோவை 21-13, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றார் இந்தியாவின் பி.வி.சிந்து.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு. 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார்.
பாக்ஸிங்கில் லவ்லினா ஒரு பதக்கத்தை உறுதி செய்துவிட்டார். இந்நிலையில், மகளிர் ஒற்றையர் பேட்மிண்டனில் வெண்கலம் வென்றார் பி.வி.சிந்து.
அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்த பி.வி.சிந்து, வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இன்று சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவோவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி அபாரமாக விளையாடிய பி.வி.சிந்து, 21-13, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றார்.
ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் பி.வி.சிந்து. 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சிந்து, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.