#TokyoOlympics இந்தியாவிற்கு 2வது பதக்கம் வென்று கொடுத்த பி.வி.சிந்துவுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு 2வது பதக்கத்தை வென்றுகொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு. 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார். பாக்ஸிங்கில் லவ்லினா ஒரு பதக்கத்தை உறுதி செய்துவிட்டார். ஆனால் அவரது போட்டிகள் இன்னும் முடியவில்லை.
இந்நிலையில், மகளிர் ஒற்றையர் பேட்மிண்டனில் வெண்கலம் வென்றார் பி.வி.சிந்து. அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்த பி.வி.சிந்து, வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இன்று சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவோவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி அபாரமாக விளையாடிய பி.வி.சிந்து, 21-13, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு 2வது பதக்கத்தை வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பி.வி.சிந்துவுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தான். அர்ப்பணிப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றில் புதிய அளவுகோல்களை செட் செய்துள்ளார். இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பி.வி.சிந்துவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்ட வாழ்த்து செய்தியில், பி.வி.சிந்துவின் அபாரமான ஆட்டத்தை கண்டு நாம் மகிழ்ந்தோம். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சிந்துவுக்கு வாழ்த்துக்கள். சிந்து இந்தியாவின் பெருமை என்று தனது வாழ்த்தை தெரிவித்தார் பிரதமர் மோடி.