டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் இந்திய வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல்..!
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு ஆடும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாடினார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ளன. இந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 18 விளையாட்டுகளில் கலந்துகொள்ள 126 வீரர், வீராங்கனைகள் டோக்கியோ செல்கின்றனர்.
ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா சார்பில் வாள்வீச்சு விளையாட்டில் வீராங்கனை பவானி தேவி கலந்துகொள்கிறார். பாய்மர படகு போட்டிக்கு தேர்வான முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை நேத்ரா குமணன் பெற்றுள்ளார்.
இந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் நிறைய வீரர்கள் கலந்துகொள்வதுடன், அவர்கள் இந்தியாவிற்காக பதக்கத்தை வென்றுகொடுக்கும் முனைப்பில் தீவிர தயாரிப்பில் ஈடுபட்டு வெற்றி நம்பிக்கையில் இந்திய வீரர், வீராங்கனைகள் டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில், ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் விதமாக, அவர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாடினார்.
இந்த கலந்துரையாடலில், ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன், சரத்கமல் ஆகிய இருவரும் கலந்துகொண்டனர். இந்த கலந்துரையாடலில் விளையாட்டு வீரர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர். மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், இணையமைச்சர் நிசித் பிரமானிக், சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரும் கலந்துகொண்டனர்.