#TokyoOlympics வரலாற்று சிறப்புமிக்க வெற்றி.. வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஏற்கனவே 3 பதக்கங்களை வென்றிருந்த நிலையில், 4வது பதக்கத்தை மல்யுத்தத்தில் ரவி குமார் உறுதி செய்து வைத்துள்ளார். ரவி குமாருக்கு இன்னும் இறுதி போட்டி மட்டும் எஞ்சியிருக்கும் நிலையில், இதற்கிடையே இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்று, இந்தியாவிற்கு 4வது பதக்கத்தை வென்று கொடுத்துள்ளது.
லீக் சுற்றில் அபாரமாக ஆடி காலிறுதிக்கு முன்னேறிய இந்திய ஆடவர் ஹாக்கி அணி, காலிறுதியில் பிரிட்டனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் அதிக அனுபவம் வாய்ந்த பெல்ஜியம் அணியிடம் தோற்று இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த இந்திய அணி, வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஜெர்மனியை எதிர்கொண்டு ஆடியது.
இந்த போட்டியில் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் அபாரமாக ஆடின. மிக விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நடந்த இந்த போட்டியில், 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி, வெண்கலம் வென்றது.
1980ம் ஆண்டுக்கு பிறகு, 41 ஆண்டுகள் கழித்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைத்தது. இந்திய ஹாக்கி அணியின் இந்த வெற்றி, இந்தியாவில் ஹாக்கி விளையாட்டுக்கே பெரும் உத்வேகமளிக்கும்.
ஹாக்கியில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி செய்த டுவீட்: வரலாற்று சிறப்புமிக்க வெற்றி! ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் நீங்கா நினைவை பதிவு செய்த நாள் இது.
வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள். இந்த சாதனையின் மூலம், ஒட்டுமொத்த இந்தியாவின், குறிப்பாக இளைஞர்களின் கற்பனையை கைப்பற்றியிருக்கிறது நமது ஹாக்கி அணி. ஹாக்கி அணியை நினைத்து ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.