வரலாறு படைத்துவிட்டீர்கள்.. இந்தியாவிற்கு முதல் தங்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
சுதந்திர இந்தியாவில் ஒலிம்பிக்கில் முதல் தங்க பதக்கத்தை வென்று வரலாற்று சாதனை படைத்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா 6 பதக்கங்களை(2 வெள்ளி, 4 வெண்கலம்) வென்றிருந்த நிலையில், இறுதிக்கட்டத்தை ஒலிம்பிக் எட்டிய நிலையில், 7வது பதக்கத்தை தங்க பதக்கமாக வென்று கொடுத்து வரலாற்று சாதனை படைத்தார் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் இறுதி போட்டிக்கு தகுதிபெற்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, 6 சுற்றுகளில் 2ம் சுற்றில் அதிகபட்சமாக 87.58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்தார். இந்த தூரத்தை 6 சுற்றுகளில் எந்த நாட்டு வீரராலும் முந்த முடியாததால், தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா.
ஒலிம்பிக்கில் சுதந்திர இந்தியாவிற்கு முதல் தங்க பதக்கத்தை வென்று கொடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா. இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்து பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவுக்கு ஒட்டுமொத்த தேசமும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துவருவதுடன், அவரது வெற்றியை நாடே கொண்டாடிவருகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நீரஜ் சோப்ராவுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, டோக்கியோவில் வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு நீரஜ் சோப்ரா படைத்திருக்கும் சாதனை, என்றென்றும் நினைவில் கொள்ளப்படும். இளம் நீரஜ் அருமையாக விளையாடினார். அவர் தங்கம் வென்றதற்கு எனது வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நீரஜ் சோப்ராவுக்கு குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் தெரிவித்த வாழ்த்து செய்தியில், இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான அருமையான வெற்றி, நீரஜ் சோப்ராவின் வெற்றி. நீங்கள்(நீரஜ்) வென்ற தங்க பதக்கம், தடைகளை தகர்த்து படைக்கப்பட்ட வரலாறு. உங்களது சாதனை இந்திய இளைஞர்களை உத்வேகப்படுத்தும்; முன்னுதாரணமாக திகழும் என்று ராம் நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.