தங்கம் வென்ற தங்கமகனுக்கு தீவிர காய்ச்சல்... மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டம்..!
ஒலிம்பிக் வரலாற்றிலேயே தடகளத்தில் முதல் தங்க பதக்கத்தை இந்தியாவுக்காக வென்று நீரஜ் சோப்ரா சரித்திர சாதனை படைத்தவர். இதையடுத்து இந்தியா திரும்பிய அவர் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்தார்.
டோக்யோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு கடும் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒலிம்பிக் வரலாற்றிலேயே தடகளத்தில் முதல் தங்க பதக்கத்தை இந்தியாவுக்காக வென்று நீரஜ் சோப்ரா சரித்திர சாதனை படைத்தவர். இதையடுத்து இந்தியா திரும்பிய அவர் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்தார். சமூக வலைதளங்களிலும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நாடு திரும்பிய பிறகு அவர் கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் மற்றும் உடல் சோர்வாக காணப்பட்டார்.
இதனால், சந்தேகமடைந்த அவர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் நெகடிவ் என்று ரிசல்ட் வந்துள்ளது. அதன் பின்னர் டெல்லி செங்கோட்டையில் 75-வது சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், நீரஜ் சோப்ராவும் முகக்கவசங்களின்றி வெறும் 2 அடி இடைவெளியில் நின்று பேசினர்.
இந்நிலையில், அரியானா மாநிலம் பானிபட் நகரில் நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நீரஜ் சோப்ராவுக்கு அதிக காய்ச்சல் இருந்ததால் அவரால் அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக நிகழ்ச்சியின் பாதியிலேயே அவர் அங்கிருந்து கிளம்பி அருகியுள்ள மருத்துவமனையில் சேர்ந்தார். அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் கடுமையான காய்ச்சல் இருப்பதாக கூறியுள்ளனர். இதனையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.