இந்திய அணியில் இப்படி ஒரு எழுதப்படாத விதி இருக்கா..? பகிரங்கமாக வெளிப்படுத்திய இங்கிலாந்து முன்னாள் கேப்டன்
இந்திய அணியில் சீனியர் மற்றும் ஜூனியர் வீரர்களுக்கு இடையேயான உறவு குறித்த சுவாரஸ்யமான தகவலை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் பகிர்ந்துள்ளார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், 323 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி ஆடியது. முதல் மூன்று விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே இழந்த இந்திய அணியை கோலியும் ரெய்னாவும் மீட்டெடுத்தனர். 27 ஓவரில் 140 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தது இந்திய அணி.
இப்படியான இக்கட்டான சூழலில் களமிறங்கிய தோனி, 47வது ஓவர் வரை களத்தில் நின்றார். 20 ஓவர்கள் களத்தில் நின்ற தோனி, அடித்து ஆடவேயில்லை. மந்தமாக ஆடிய தோனி, வெற்றி இலக்கை விரட்ட முற்படவேயில்லை. இங்கிலாந்து பவுலிங்கை அடித்து ஆட தோனி முயற்சிக்கவே இல்லாதது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. 59 பந்துகளுக்கு 37 ரன்கள் மட்டுமே எடுத்தார். தோனி இப்போது அடிப்பார், இப்போது அடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தோனியின் மந்தமான ஆட்டத்தால் அதிருப்தியடைந்த ரசிகர்களில் ஒரு பகுதியினர், தோனியை சத்தமிட்டு கிண்டல் செய்து விமர்சித்தனர். தோனியின் ஆட்டம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எனினும் தோனி மீதான விமர்சனத்திற்கு கேப்டன் கோலி பதிலடி கொடுத்தார்.
இதுதொடர்பாக பேசிய கேப்டன் கோலி, தோனி எப்போதெல்லாம் அவரது பாணியில் ஆடமுடியாமல் போகிறதோ அப்போதெல்லாம் விமர்சனங்கள் எழுகின்றன. ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக்கொடுத்தால், சிறந்த ஃபினிஷர் என்று புகழ்பவர்கள், வெற்றிகரமாக முடிக்காவிட்டால் தோனியை தூற்றுகின்றனர். இது துரதிர்ஷ்டவசமானது என தெரிவித்திருந்தார்.
தோனிக்கு ஆதரவாக கோலி குரல் கொடுத்தது தொடர்பாக கருத்து தெரிவித்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன், தோனி மீதான விமர்சனங்களுக்கு கோலி பதிலடி கொடுத்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. இந்திய அணியை பொறுத்தவரை சீனியர் வீரர்களை விமர்சிக்க மாட்டார்கள் என நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை பொறுத்தமட்டில் விளையாட்டு மட்டுமல்ல, பொதுவாக எல்லா துறைகளிலுமே சீனியர்களுக்கு ஜூனியர்கள் மதிப்பளிப்பது வழக்கம். அதேதான் கிரிக்கெட்டிலும்.. கிரிக்கெட் மட்டும் விதிவிலக்கல்ல. இந்திய அணியில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இருக்கும் சீனியர் வீரர்களை விமர்சிக்காமல், விட்டுக்கொடுக்காமல் அவர்களுக்கு மதிப்பும் முக்கியத்துவமும் அளிப்பது வழக்கம். அதைத்தான் நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளர்.