#TokyoOlympics இந்தியாவிற்கு முதல் பதக்கம்.! பளுதூக்குதலில் வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு பிரதமர் வாழ்த்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை(வெள்ளி) வென்று கொடுத்துள்ளார் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு.
டோக்கியோவில் நேற்று கோலாகலமாக தொடங்கி ஒலிம்பிக் போட்டிகள் நடந்துவருகின்றன. துப்பாக்கி சுடுதலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளவேனில் வாலறிவன் ஏமாற்றமளித்த நிலையில், 49 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் பதக்க பட்டியலில் இந்தியா கணக்கை தொடங்கியுள்ளது.
மகளிருக்கான பளுதூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் “ஸ்னாட்ச்” பிரிவில் 87 கிலோ, ”கிளீன் அன்ட் ஜெர்க்” பிரிவில் 115 கிலோ என, மொத்தம் 202 கிலோ பளுதுாக்கிய இந்தியாவின் மீராபாய் சானு, 2ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதே எடைப் பிரிவில் சீன வீராங்கனை ஹூ ஜிஹி தங்கப் பதக்கம் வென்றார். இந்தோனேஷிய வீராங்கனை கேண்டிக் விண்டிங் வெண்கல பதக்கம் வென்றார்.
ஒரு வெள்ளி பதக்கத்துடன் இந்தியா பதக்க பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது. 2 தங்கம் மற்றும் ஒரு வெண்கலத்துடன் சீனா முதலிடத்திலும், ஒரு தங்கப்பதக்கத்துடன் ஈரான் 2ம் இடத்திலும் உள்ளன.
இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் இதைவிட நல்ல தொடக்கம் இருக்கவே முடியாது என்று பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.