#TokyoOlympics ஃபைனலில் தோல்வி.. தங்கத்தை தவறவிட்ட இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளி வென்றார்
டோக்கியோ ஒலிம்பிக்கில் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில் இறுதி போட்டியில் தோற்று வெள்ளி பதக்கம் வென்றுள்ளார் இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியா.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா 4 பதக்கங்களை வென்றிருந்த நிலையில், 5வது பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார் இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியா.
57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியின் அரையிறுதியில் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்த ரவிக்குமார் தாஹியா, இன்று நடந்த இறுதி போட்டியில் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி வீரரான ஜவுர் உகுயேவை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இருவருமே தங்கத்திற்கான கடுமையாக போராடினார். விறுவிறுப்பான இந்த போட்டியில் 4-7 என்ற புள்ளிக்கணக்கில் ரவிக்குமார் தோல்வியடைந்தார்.
எனவே தங்கத்தை இழந்து வெள்ளி வென்றார் ரவிக்குமார். இது இந்தியாவிற்கு இந்த ஒலிம்பிக்கில் 5வது பதக்கம். மீராபாய் சானுவுக்கு பிறகு இது 2வது வெள்ளி பதக்கம் ஆகும். இந்திய அணி 2 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.