#TokyoOlympics மகளிர் ஹாக்கி: அரையிறுதியில் இந்திய அணி தோல்வி..! வெண்கலத்திற்கான வாய்ப்பு
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி அரையிறுதியில் அர்ஜெண்டினாவிடம் 2-1 என இந்திய அணி தோல்வியடைந்தது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இதுவரை இந்திய அணி 3 பதக்கங்களை வென்றுள்ளது. மல்யுத்த வீரர் ரவி குமார் 4வது பதக்கத்தை உறுதி செய்துவிட்டார்.
இந்திய ஆடவர் ஹாக்கி மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் பதக்க நம்பிக்கையளிக்கின்றன. ஆடவர் ஹாக்கி அரையிறுதியில் பெல்ஜியத்திடம் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், வெண்கலத்திற்கான போட்டியில் ஆடவுள்ளது.
அதேபோலவே மகளிர் ஹாக்கி அணியும் அரையிறுதியில் தோல்வியை தழுவியுள்ளது. இன்று நடந்த அரையிறுதி போட்டியில் அர்ஜெண்டினா அணியை எதிர்கொண்டது இந்திய மகளிர் அணி.
ஆட்டத்தின் 2வது நிமிடத்திலேயே இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் கோல் அடித்தார். 18வது நிமிடத்தில் முதல் கோலை அடித்த அர்ஜெண்டினா, அதன்பின்னர் 2வது கோலையும் அடித்தது. ஆனால் இந்திய அணி 2வது நிமிடத்தில் அடித்த கோலைத்தவிர வேறு கோலே அடிக்கவில்லை.
இதையடுத்து 1-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அர்ஜெண்டினாவிடம் தோல்வியை தழுவியது. எனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த இந்திய மகளிர் ஹாக்கி அணி, வெண்கலத்திற்கான போட்டியில் பிரிட்டனை வரும் 6ம் தேதி எதிர்கொள்கிறது.