#TokyoOlympics ஆடவர் ஹாக்கி: ஜெர்மனியை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தது இந்திய அணி
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்றது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் அபாரமாக ஆடிய இந்திய ஆடவர் ஹாக்கி அணி, அரையிறுதியில் பெல்ஜியத்திடம் தோற்று இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த நிலையில், வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஜெர்மனியை எதிர்கொண்டது இந்தியா.
இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அருமையாக ஆடிய இந்திய அணி, ஜெர்மனிக்கு கடும் சவால் அளித்தது. முதல் கோலை ஜெர்மனி அடிக்க, இந்தியாவிற்கு முதல் கோலை சிம்ரன் ஜீத் அடித்தார்.
இதையடுத்து ஜெர்மனி அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து 3-1 என முன்னிலை பெற, இந்தியாவின் ஹர்திக் சிங் மற்றும் ஹர்மன்ப்ரீத் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்ததால் 3-3 போட்டி சுவாரஸ்யமடைந்தது.
அதன்பின்னர் 3வது கால் பகுதிய்ல் இந்திய வீரர்ருபீந்தர் பெனால்டி ஸ்ட்ரோக்கில் ஒரு கோல் அடிக்க, சிம்ரன் ஜீத்தும் ஒரு கோல் அடிக்க, 5-3 என இந்திய அணி முன்னிலை பெற்றது. கடைசி கால் பகுதியில் ஜெர்மனி ஒரு கோல் மட்டுமே அடித்தது. இதையடுத்து 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது.
1980ம் ஆண்டுக்கு பிறகு, 41 ஆண்டுகள் கழித்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது இந்திய ஹாக்கி அணி.